உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் நேற்று மாலை கொழும்பில் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாஷிம் செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முந்திய பெரிய வௌ்ளிக்கிழமையான நேற்றைய தினத்தில் தீவிரவாதி சஹ்ரானின் மனைவி, மைத்துனர்கள் உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலிமுகத்திடல் பகுதியில் குடும்ப சுற்றுலா என்ற பேரில் ஒன்று கூட முற்பட்டுள்ளனர்.
எனினும் இவர்களின் கொழும்பு வருகை குறித்து முன்னதாகவே குருநாகல் கட்டுப்பொத்தை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள், கொழும்பின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இரகசிய அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தீவிரவாதி சஹ்ரானின் குடும்ப உறவினர்கள் ஏதேனும் சதிநாசகார செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு குறித்த அறிவித்தல் மூலமாக கட்டுப்பொத்தை பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் குறித்த குழுவில் இருந்த தீவிரவாதி சஹ்ரானின் குடும்ப அங்கத்தவர்களின் புகைப்படங்களும் இலகுவாக அடையாளம் காணக்கூடிய வகையில் கொழும்பின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டுப்பொத்தை பொலிசாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாக கொண்டு கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சஹ்ரானின் புதல்வியின் புகைப்படத்தைக் கொண்டு பொலிசார் அவர்கள் பயணித்த பேருந்தை அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து தீவிரவாதி சஹ்ரான் குடும்பத்தினர் பயணித்த பேருந்து வண்டியை கொழும்பு பொரளை பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர்.
சஹ்ரான் மற்றும் ஏனைய தீவிரவாதிகளை நினைவுகூறும் வகையில் அவர்கள் ஏதேனும் நிகழ்வுகளில் ஈடுபட வருகை தந்திருக்கலாம் என்று கட்டுப்பொத்தை பொலிசார் வழங்கியிருந்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பொரளை பொலிசார் சஹ்ரான் குடும்பத்தை தீவிரமாக விசாரித்துள்ளனர்.
எனினும் அவர்கள் குடும்ப சுற்றுலா ஒன்றுக்காகவே கொழும்புக்கு வருகை தந்திருந்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேர விசாரணையின் பின்னர் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கட்டுப்பொத்தை பொலிசாரின் இரகசிய புலனாய்வுகள் மூலம் சஹ்ரான் குடும்பத்தின் ஏராளமான தகவல்கள் தற்போது மீண்டும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.