இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (03.04.2025) காலை 09.30 மணி தொடக்கம் பி.ப 03.30 மணி வரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், தற்போதைய காலகட்டத்தில் இணைய செயற்பாடுகள் அலுவலக செயற்பாடுகளுடன் இணைந்திருப்பதாகவும், தற்போது அரசாங்க சேவையினை துரிதப்படுத்துவதற்காக தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் இணைய வழிகளிலும் மற்றும் வட்சப் (WhatsApp) குழுமத்தின் ஊடாகவும் பரிமாற்றப்படுவதாகவும், அது விரைவான வினைத்திறனா சேவைக்கு துணைநிற்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இணையவழி பாதுகாப்பு தொடர்பான இச் செயலமர்வு பயனுறுதி வாய்ந்தது எனவும், ஆதலால் உத்தியோகத்தர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்வில்வளவாளர்களாக CERT நிறுவனத்தின் முகாமையாளர் திரு. திலின திசாநாயக்க, பொறியியலாளர்களான திருமதி திருனி திசார, திருமதி பாத்திமா மினோசா, திரு. சவிர் அகமட் மற்றும் திருமதி தர்சினி டிலானி ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இச் செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உதவி மாவட்டச் செயலாளர்கள், கணக்காளர்கள், மாவட்ட, பிரதேச செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




