பிரித்தானியா் வாழ் தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா நேற்று (24 மார்ச் 2025) தடை விதித்துத்துள்ளது.
2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் (Global Human Rights Sanction Regime) கீழ், இலங்கையில் இனப் படு கொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள இனப் படு கொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) பல வழிகளில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே.
ஏப்பிரல் 2021 இல் ITJP என்ற மனித உரிமைகள் அமைப்பு சவேந்திர சில்வாவுக்கு எதிராக 50 பக்க ஆவணந்தை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO) சமர்ப்பித்திருந்தது. அதுபோலவே ICPPGயும் தொடரும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்து, இலங்கை அதிகாரிகளை தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்தது.
அதனை தொடர்ந்து, ICPPG அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சித்திரவரையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறை இளையோரை ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை பலவழிகளில் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் பிரித்தானியா வாழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்தனர்.
அவர்களின் முயற்சியில் 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் அவர்களின் மூலம் முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டது.
அதனை தொடர்ந்து அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி இப்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டது.
கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு 23 யூலை 2021 அன்று பிரித்தானிய பிரதமருக்கு ICPPG யால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளிவிவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக அமையவில்லை.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன், இதுவரை 100க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வீடியோவில் தெரிவித்து ஒரு வீடியோ ஆவணத்தையும் வெளியிட்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்றில் விவாதங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போது ஆட்சியமைந்துள்ள பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி கடந்த தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தடையை அறிவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தது.
ஆயினும் இதனை நடைமுறைப்படுத்த தாமதித்ததால், ICPPG இந்த போராட்டத்தை தொடர்ந்து வந்ததுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விட்டிருந்தது.
அத்துடன் ITJP, Redress, Sri Lanka Campaign, Tamils For Labour மற்றும் British Tamil Conservatives ஆகிய அமைப்புக்களின் கடும் உழைப்பின் விளைவாக, இன்று பிரித்தானிய அரசு இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்து, அதற்கான பட்டியலை அறிவித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டு தப்பிவந்தவர்கள், சித்திரவதை அனுபவித்தவர்கள் மற்றும் பிரித்தானாய வாழ் இளையோரின் இடைவிடாத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே இதுவாகும்.
இனப் படு கொலைக்கான நீதிப் போராட்டத்தில் இது ஒரு ஆரம்பபடியாக அமையும் என்று நம்பப்படுகிறது.