முதூர் பொலிஸாரினால் தனது கணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரன் முனீஸ்வரி என்பவரினால் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில்,
கடந்த 24.02.2025 அன்று குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக தெகிவத்தை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எமது கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன்போது எமது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்பாதுகாப்பிற்காக திருப்பி தாக்கியதோடு தப்பியும் ஓடினார்கள்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிசார் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்யது சிறையில் அடைத்ததுடன் இரு தரப்பிலும் சிலரை தேடி வந்தார்கள். பின்னர் இரு தரப்பினரும் சமாதானமான முறையில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் (07) பாலர் பாடசாலைக்குச் சென்று திரும்பி வரும் வழியில் மூதூர் பொலிசார் எனது கணவரான லிங்கேஸ்வரன் என்பவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று எனது கணவரின் தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
அத்துடன் 30 பேருக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் எமது ஊருக்குள் வந்து தாக்குதல் மேற்கொண்டபோதும் வெறும் 4 பேரை மாத்திரம் கைது செய்து பிணையில் விடுவித்தும் ஏனையவர்களை கைது செய்யாமலும் ஒரு பக்கச்சார்பாக பொலிசார் நடந்து கொள்கின்றனர்.
எனவே சட்டத்திற்கு முரனாண வகையிலும் அடிப்படை உரிமையை மீறும் வகையிலும் தாக்குதல் மேற்கொண்டதுடன், பக்கச்சார்பான முறையிலும் நடந்து வருகின்ற பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எனது கணவரின் தாக்குதல் சம்பவத்திற்கு நீதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.