கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இன்று (6) மதியம் மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் புவி சரிதவியல் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர் உட்பட பல்வேறு திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கனிய மணல் அகழ்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்காமல் நிறுத்தி வைக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (6) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கனிய மணல் உட்பட சுற்றாடலை பாதிக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு நடவடிக்கை முன்னெடுப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக மன்னாரில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வரும் நிலையில் பாரிய அச்சுறுத்தலை மக்கள் எதிர்கொள்ளும் கனிய மணல் அகழ்வு குறித்தும் இன்று(6) கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதி நிதிகளினால் கனிய மணல் அகழ்வை முற்றாக நிறுத்துவதற்கான நடவடிக்கையை மன்னார் மாவட்ட அதிகாரிகள் தரப்பினர் மிக காத்திரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் மே மாதம் வரை கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் விமல் ரத்னநாயக்க தெரிவித்துள்ளதாகவும் குறித்த அமைச்சர் மன்னாருக்கு வருகை தந்து கனிய மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எதிர்காலத்தில் முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.
மன்னார் மாவட்ட பகுதியில் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகள் குறித்தும் சட்டவிரோத மணல் அகழ்வு குறித்தும் அரச திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


