யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள் நாளை முதல் வழமை போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்த நிலையில்
வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் நலன் கருதி கிளினிக் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாவதுடன் உரிய சிகிச்சைகளை பெறமுடியாது பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.
வைத்தியர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்கள் பெரும் ஆபத்தையும் எதிர்நோக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் இப் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் பகுதியளவில் இணக்கம் ஏற்பட்டாலும்
இதுவரை முழுமையான இணக்கம் எட்டப்படவில்லை என அறிய முடிகிறது.