யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் (27) நாடளாவிய ரீதியில் எமது சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளோம். கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடைமுறையின் படி தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு அளவு உட்பட சில கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பதவி உயர்வு காலநிலை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சுகாதார ஊழியர்களை முழுமையாக பாதிக்கும் ஒரு செயற்பாடாக உள்ளது. தாதியர்கள் வேலைப்பழுவுக்கும் மத்தியில் இரவு பகலாக வேலை செய்துவரும் நிலையில் இந்த நடவடிக்கை அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.
இந்த அநீதிக்கெதிராக அகில இலங்கை ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தாம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.



