வடபகுதிக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுத்து, மீனவமக்களை நிம்மதியாக வாழவிடுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் 22.02.2025இன்று பாராளுமன்றில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது.
குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வழிமொழிந்து கருத்துத்தெரிவித்ததுடன், ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மிமென, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் இப்பிரேரணை முன்வைத்தமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் குறித்த பிரேரணையை சபையில் முன்வைத்தமைக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், வடபகுதியில் இடம்பெறும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பதிலளித்தார்.
குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்ததாவது,
கடற்றொழிலில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை சட்டவிரோதிகள் செய்து வருவதால் உண்மையான மீனவர்கள், மீனவக் குடும்பங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்டுகின்றார்கள் அரசாங்கம் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத தொழில்களை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும்.
வடக்கு கடல் இப்போது சட்டவிரோதிகளின் ஆளுகையில் காணப்படுகின்றது.
சுருக்குவலை வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் டைனமற் வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களால் வடக்கு கடல் நிரம்பிஉள்ளது. சட்டத்துக்கு புறம்பான வகையில் சட்டவிரோதிகளின் ஆட்சி வடக்கு கடலிலே நடக்கின்றது. அமைச்சர் அவர்களே உங்களுடைய ஆட்சி வடக்கு கடலிலே இல்லை.
வடக்குமாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகியநான்கு மாவட்டங்களிலும் மீனவர்கள், மீனவக்குடும்பங்கள் அதிகமாக உள்ளனர். மீன்பிடியாளர்களைத்தவிர பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வாழ்கின்றார்கள். 10,500ற்கும் மேற்பட்ட பெண் தலைமைக்குடும்பங்கள் கூட இதனை நம்பி வாழ்கின்றார்கள்.
முன்பு இப்படி சட்டவிரோத தொழில்கள் இல்லை. மீனவ சமூகம் மிகவும் செழிப்பாக இருந்தார்கள். இப்போது மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே. முன்னைய ஆட்சியாளர்கள் சட்டவிரோதிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தால் இப்போது விரிவடைந்து கடல்முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
இதனைத் தடுக்கவேண்டியவர்களான கடற்றொழில் திணைக்களங்கள், கடற்படையினர், பொலிசார் கையாலாகாதவர்களாக காணப்படுகின்றார்கள். இடைக்கிடை சிலரைக் கைதுசெய்கின்றார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு கடற்பகுதிகளைப் பொறுத்தவரையில் காப்பாற்றப்படவில்லை.
மீனவ மக்களில் பலர் இந்த தொழிலை விட்டுவிடலாமோ என்று எண்ணுமளவுக்கு நிலமை மோசமாகின்றது. நாட்டின் கடல்பகுதியில், கணிசமான பகுதி வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இதனை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் மீன்இனத்தின் உற்பத்தி குறைந்து மீன் இனம் அழிக்கப்படும். மீன்வங்கி என்று சொல்லப்படும் வடபகுதிக் கடலில் மீன்கள் அற்றநிலை உருவாகலாம்.
இதனைச், சட்ட விரோதிகளின் செயற்பாடுகளை நீங்கள் தடுப்பீர்களா? இல்லையா? என்பதை வடக்கு மீனவர்களுக்கு சொல்லவேண்டும். சட்டம் ஒழுங்கை இந்த விடயத்தில் காப்பாற்றுவீர்களா? என்று எமது மீனவ சமுதாயத்திற்கு கடற்றொழில் அமைச்சரே நீங்கள் சொல்லவேண்டும்.
எமது கடற்பகுதியில் சட்டவிரோதிகளின் ஆதிக்கங்கள் கூடிவிட்டது. இந்த நிலமைகளைத் தடுக்கவேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படவேண்டும் என அழுத்தமாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எமது கடற்பரப்பில் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் விடயத்திற்கு எமது மீனவர்கள் பூரணஒத்துழைப்பையும் ஆதரவினையும் தருவார்கள். தயவுசெய்து மீனவசமூகத்தினை வாழவிடுங்கள் என்றுதான் கேட்கின்றேன் – என்றார்.