நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட் திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்பட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். இது தமிழ்மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியதுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது. கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்த நீதிபதி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் இம்முறை சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலயத்தின் பூசாரியார் மற்றும் முக்கியஸ்தர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் நேற்றுமுன்தினம் அழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலயத்தின் பூசகர் மதிமுகராசாவிடம் கேட்டபோது இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணிவரை முன்னெடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். 6மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் சிறப்பாக இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.