மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கடுக்காமுனை பகுதியில் பிறந்து ஒன்றரை மாதமான குழந்தை கடந்த 16ஆம் திகதி இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு குழந்தையும் தாயும் தமது வீட்டில் உறக்கியுள்ளனர்.
மறுநாள் திங்கட்கிழமை (17) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிபிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரனைகளை மேற்கொண்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பணித்தார்.
பரிசோதனையில் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கபடாததால் உடல்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.