மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படு கொ லையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் 11.02.2025 இன்று செவ்வாய்க்கிழமை நினைவுகூரப்படுகின்றது. இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படு கொ லை செய்யப்பட்டதுடன் 25ற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தார்கள்.
குறித்த படு கொ லைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 29 ஆண்டுகளுக்கு பின்னரும் நீதி கிடைக்காமல் நீதி கோரி வரும் நிலையில் 11.02.2025 செவ்வாய்க்கிழமை குறித்த படு கொ லையின் 29வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கின்றார்கள். குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படு கொ லை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் துஷ் – பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொ லை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.
இக் கொ லைச் சம்பவம் தொடர்பாக 96 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவான் மு.கோ.செல்வராசா அவர்களின் முன்னிலையில் தொடர்ச்சியாக 3 நாட்கள் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இதன்போது 7 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை மூதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன்போது போதிய சாட்சியங்கள் இருப்பதன் காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 154ஆவது பிரிவின்கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு தீர்ப்புக்காக குறித்த வழக்கு பாரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு நிமிர்த்தம் குறித்த வழக்கானது அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில்
சுப்பையா சேதுராசா
அழகுதுரை பரமேஸ்வரி
அருமைத்துரை வள்ளிப்பிள்ளை
கிட்ணன் கோவிந்தன்
அருணாசலம் தங்கவேல்
செல்லத்துரை பாக்கியராசா
வடிவேல் நடராசா
இராஜேந்திரம் கருணாகரம்
சண்முகநாதன் நிதாந்தன்
இராமஜெயம் கமலேஸ்வரன்
கந்தப்போடி கமலாதேவி
சிவக்கொழுந்து சின்னத்துரை
சிவபாக்கியம் நிசாந்தன்
பாக்கியராசா வசந்தினி
அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி
தங்கவேல் கலாதேவி
ஸ் ரீபன் பத்துமா
சுந்தரலிங்கம் பிரபாகரன்
சுந்தரலிங்கம் சுபாஜினி
கனகராசா சுவாதிராசா
சுப்பிரமணியம் பாக்கியம்
விநாயகமூர்த்தி சுதாகரன்
ஆனந்தன் அன்னம்மா
விஜயகாந் லெட்சுமி
அருமைத்துரை தனலெட்சுமி ஆகியோர் உட்பட 26பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
