“படு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க அனுப்பிவைத்த கடிதம் எனக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பார்த்து வேதனையடைந்தேன். அதிகளவில் கரிசனை கொண்டுள்ளேன். பதில் கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். படு கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருக்கின்றோம்.” – இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது படு கொலை செய்யப்பட்ட ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அரச தரப்புக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் மற்றும் லசந்த விக்கிரமதுங்க படு கொலை விசாரணைகள் தொடர்பில் சிவில் தரப்பினர் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் குறித்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறுகையில்,
“படு கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க தொடர்பில் பத்திரிகைகளில் பிரதான செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குச் சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் லசந்த விக்கிரமதுங்க உட்பட பல படு கொலைக்கான நீதி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிறந்த அதிகாரிகள் உள்ளார்கள். இருப்பினும் ஒருசில பிரச்சினைகள் காணப்படுகின்றன. படு கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க விவகாரம் தேசிய பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றது. ஆகவே, இந்த விடயம் தொடர்பில் முழு நாள் விவாதத்தை நடத்த வேண்டும். ஏனெனில், இவ்வாறான பிரச்சினைகள் இனி தோற்றம் பெறக் கூடாது.” – என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
“படு கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருக்கின்றோம்.
லசந்தவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க அனுப்பிவைத்த கடிதம் எனக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பார்த்து வேதனையடைந்தேன். அதிகளவில் கரிசனை கொண்டுள்ளேன். பதில் கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் நீதியை நிலைநாட்டுவதற்காகவே செயற்படுகின்றது. அதற்கான சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிறந்த அதிகாரிகள் உள்ளார்கள். இருப்பினும் திணைக்களம் ஒரே போக்கில் செயற்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி சட்டமா அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அவசியமாயின், புதிய விசாரணைகளை மேற்கொள்ளவும், சாட்சியம் திரட்டவும் ஆலோசிக்கப்படும். அதற்கான வலியுறுத்தலை சட்டமா அதிபரிடம் முன்வைப்பேன்.
சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் பிடிக்குள் சிக்குப்படாமல் இருப்பதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசு பொறுப்புடன் செயற்படும் என்பதைக் குறிப்பிட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
