காலி, மீட்டியாகொடை, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை(16) மீட்டியாகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்டியாகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
மீட்டியாகொடை, மஹவத்த பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டியில் சென்ற சந்தேக நபர்கள் சிலர் வீடொன்றில் இருந்த தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கிச் பிரயோகத்தில் தந்தையின் வயிற்றுப் பகுதியிலும் மகளின் கால் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.