வடக்கு பாடசாலைகளில் ஏற்பட்ட குழப்பம்..!

 

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், தரம் 10 மாணவர்களுக்கான தொகுதிப் பாடங்களில் ஒன்றான தமிழ் இலக்கிய  நயம் பரீட்சை வினாத்தாளை வடமாகாண கல்வித் திணைக்களம் அனுப்ப மறந்ததால் பரீட்சை மண்டபங்களில் நேற்று ஆசிரியர்களும் மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

10ஆம் தர மாணவர்களுக்கான தொகுதிப் பாடங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம் இரண்டாவது பகுதிப் பரீட்சை நேற்றையதினம்(15) காலை  இடம்பெறுவவிருந்தது.

இதன்போதே வடமாகாணக் கல்வித் திணைக்களம் பரீட்சை வினாத்தாளை பாடசாலைகளுக்கு அனுப்பாதமை தெரியவந்தது.

இதையடுத்து PDF வடிவில் வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு அவை அவசர அவசரமாக பாடசாலைகளில் பிரதியெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

பாடசாலைகளில் பிரதியெடுக்கும் வசதி (பிறிண்டர்) இல்லாத பாடசாலைகள் மாற்று ஏற்பாடுகளுக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், குறிப்பிடப்பட்ட நேரத்தை விட தாமதமாகவே பரீட்சைகள் ஆரம்பித்தன.

அனைத்துப் பாடசாலைகளிலும் ஒரேநேரத்தில் பரீட்சைகள் ஆரம்பமாகின்றமை உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பில் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் குயின்டன் தெரிவிக்கையில்,

பரீட்சை வினாத்தாள்கள் அனுப்பப்பட்டன. நான்கு கேள்விகளே அதில் இடம்பெறவில்லை. அந்தக் கேள்விகள் பாடசாலைகளுக்கு PDF வடிவில் அனுப்பப்பட்டு பிரதியெடுத்துக் கொடுக்கப்பட்டன என தெரிவித்துள்ள போதிலும்  வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிபர்கள் பரீட்சை வினாத்தாள்கள் தமக்குக் கிடைக்காதமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Comments are closed.