வஞ்சம் தீர்த்த குற்ற தடுப்பு பிரிவினர்-மன்னார் நீதிமன்றை விட்டு வெளியேறிய இருவருக்கு நேர்ந்த கதி..!

மன்னார் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக வருகை தந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் சென்ற இருவரை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பிடித்து அவர்கள் இருவரின் உடமையில் ஐஸ் போதைப் பொருளை வைத்து கடுமையாக தாக்கி மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

-சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸார் மீது தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த நபரும்,பிரிதொரு நபரும் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்தனர்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் குறித்த இருவரும் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வருகை தந்த போது  மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இருவரையும் பிடித்துச் சென்று பிறிதொரு இடத்தில் வைத்து  அவர்கள் இருவரின் உடமையில் ஐஸ் போதைப் பொருளை வைத்து கடுமையாக தாக்கி மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இருவரும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பொலிஸாரின் குறித்த நடவடிக்கை குறித்து சட்டத்தரணிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Comments are closed.