நாட்டில் இடம் பெற்ற கோர விபத்துக்கள்-பெண் உட்பட எழுவர் பலி..!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 7 வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (04) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களவாஞ்சிகுடி – குருமன்வெளி வீதியில் எருவில் காயல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலியால – பெரகல வீதியில் பாதசாரி கடவையில் பயணித்த நபர் மீது வேன் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கந்தேகும்புர பகுதியை சேர்ந்த 89 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தொரதொட்ட – வதுரம்முல்ல வீதியில் நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கஹஹேன பகுதியில் பாதசாரி கடவையில் பெண் ஒருவர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண், அத்துருகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொரதொட்ட, கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பெலியத்த – தங்கல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 75 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் பெட்டகொடோவ பஸ்டியன் மாவத்தை பகுதியில் பெட்டகொடோவவிலிருந்து ஹோமாகம நோக்கி பயணித்த பஸ் ஒன்று பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 74 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் ஹிக்கசேன பிரதேசத்தில் லொறி ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துக்கு காரணம் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதெனிய – அனுராதபுரம் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 46 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Comments are closed.