தவறான உறவுக்கு தடையாய் இருந்த கணவனை சம்பவம் செய்த மனைவி..!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி 2 கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

கரூர் மாவட்டம் கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் ராசு (47). அதே கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் (40), சின்னக்காளை (38). இவர்கள் மரம் வெட்டும் தொழிலாளர்கள். இவர்களுக்கு உதவியாக ராசுவின் மனைவி வள்ளியும் (44) உடன் சென்று வந்தார். அப்போது வள்ளிக்கு பொன்னம்பலம், சின்னக்காளை ஆகிய இருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. வள்ளி ஒரே நேரத்தில் பொன்னம்பலம், சின்னக்காளை ஆகியோருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் கணவர் ராசுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வள்ளி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு முன் ராசு அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பொன்னம்பலம் மற்றும் சின்னக்காளை ஆகிய இருவரிடமும் தனது மனைவியுடன் எப்படி பழகலாம் என ராசு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ராசுவின் மனைவி வள்ளியும் சேர்ந்து ராசுவிடம் தகராறு செய்தார். இதனையடுத்து 3 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த கட்டையால் ராசுவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளி, அவரது காதலர்கள் பொன்னம்பலம், சின்னக்காளை ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed.