கொழும்பில் உள்ள செல்லந்தர் ஒருவரை நுவரெலியா அழைத்து சென்று அழகி செய்த திருவிளையாடல்..!

நபரொருவரை கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்தை கொடுத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த செல்போன்கள் இரண்டை திருடி, தப்பிச் சென்று மாயமான பெண்ணை நுவரெலியா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை கொழும்பு – மாலபே பகுதியில் வைத்து நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த திங்கட்கிழமை (26) கைது செய்துள்ளனர்.

கைதான பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்டிருந்த நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், அப்பெண் ஆண் ஒருவரை மயக்கி திருடிச் சென்றிருந்த 32 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளையும் 2 ஸ்மார்ட் செல்போன்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மாலபே பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் மீது வழக்கு பதிந்த நுவரெலியா  பொலிஸார், குறித்த பெண்ணை நேற்று புதன்கிழமை (28) மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாலபே பிரதேசத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்  கொழும்பை சேர்ந்த செல்வந்த நபருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவரை 2024 புது வருட சந்தோஷத்தை நுவரெலியாவில் அனுபவிக்க கடந்த டிசம்பர் 31ஆம் திகதி நுவரெலியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நுவரெலியாவில் விடுதி ஒன்றில் தங்கி புது வருடத்தை கொண்டாடிய வேளையில், அப்பெண் குறித்த நபருக்கு உணவு மற்றும் மதுபானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர், மயக்கமடைந்த நபரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை திருடி எடுத்துச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

மறுநாள், புது வருட தினத்தில் மயக்கத்திலிருந்து தெளிந்த நபர், திருட்டு தொடர்பாக நுவரெலியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதையடுத்து, சந்தேக நபரான பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை ஆதாரமாகக் கொண்டு நுவரெலியா பொலிஸார் மாலபே பகுதிக்குச் சென்று பெண்ணை கைது செய்துள்ளனர்.

Comments are closed.