கணவன் இறந்த அதிர்ச்சி-மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த மனைவி..!

டெல்லியில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகத்தில், மனைவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, இளைஞர்கள் திடீர் திடீரென உயிரிழப்பது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக, 18 வயதிலிருந்து 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. வழக்கம் போல் வேலை செய்யும் இளைஞர்கள் என அனைவரும் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்:

சமீபத்தில் கூட, உத்தர பிரதேசத்தில் மொபைல் போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காசியாபாத் பகுதியில் வசித்து வருபவர் அபிஷேக் (25). இவரது மனைவி அஞ்சலி. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு செல்ல திட்டமிட்டனர். அப்போது, அபிஷேக்கிற்து நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதனால், பயந்துபோன அஞ்சலி நண்பர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, அபிஷேக்கை குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அபிஷேக் உயரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மனைவி தற்கொலை:

அவரது உடல், காசியாபாத்தின் வைஷாலி நகரில் உள்ள ஆல்பான் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு இரவு 9 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அஞ்சலி மீளாமல் அழுதபடியே இருந்தார். இந்த நிலையில், அவர் வீட்டின் 7வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவர் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.