அகில இலங்கை சைவ மகா சபையின் அன்பே சிவம் விருது 2023 க.கணேசனுக்கு!{படங்கள்}

அகில இலங்கை சைவ மகா சபையின் கடந்த ஆண்டிற்க்கான விருது அம்பாறை மாவட்ட  சைைநெறிக்கூட தலைவர் சிவசகோதரர் க.கணேசனுக்கு  வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபை தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த விருது வழங்கல் நாளை மாலை 3:00 மணிக்கு சிவ வாரத்தில் 03.03.2024 யாழ் சைவ பரிபாலன சபை மண்டபத்தில் வழங்கப்பட உள்ளது

அது தொடர்பாக சைவமகா சபை வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு,

ஆண்டுதோறும் மகா சிவாராத்திரி அன்று சைவ மகா சபையால் அறிவிக்கப்படும் அன்பே சிவம் விருது இம்முறை கிழக்கின் உன்னத சிவ தொண்டர்,  அம்பாறை சைவநெறிக்கூட தலைவர் சிவத்திரு க. கணேசன் அவர்களிற்கு வழங்கப்படவுள்ளது.

இவர் கடந்த இரு தசாப்தங்களாக உன்னத  தலைமைச் சிவ தொண்டராக வட கிழக்கு மலையகத்தின் இணைப்பு பாலமாக அன்பே சிவத்திற்கு உயிர் கொடுக்கும் பல மனிதநேய பணிகளை ஒருங்கிணைத்து எல்லை கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் எங்கும் மனித நேயப் பணிகளை பல பரிணாமத்தில் ஆற்றி வருகின்றார்.

சுனாமி, இறுதி யுத்தம் பின்னரான காலப்குதி மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்த சிவதொண்டரின், செயல்வீரரின் பணி மகத்தானது. பல எல்லைக் கிராம மக்களின் உடனடி மனித நேய அறக்கொடைகள், கல்வி உதவிகள், முன்பள்ளி நிர்மாணம், சிறார் போசாக்கு மேம்பாடு, பெண் தலைமைத்து குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் போன்றவற்றிற்கு வட- கிழக்கின் உள்ளூர் மற்றும் புலம்பெயர் அறக்கொடை

யாளர்களை ஒருங்கிணைத்தலில் இவரின் பங்கு மகத்தானது.

பொத்துவில் பாணமை, கஞ்சிகுடிச்சாறு,  தங்கவேலாயுதபுரம், குடிநிலம் என நீளும் மிக தொலைதூர போரின், புறக்கணிப்புக்களின் வடுக்களை சுமந்த ஊர்கள் அனைத்திற்கும் இவரின் மோட்டார் சைக்கிள் பயணித்திருக்கின்றது. உதவிகளை தகுந்த நேரங்களில் சேர்ப்பித்திருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களின் போது உடனடி உதவிக்கு அணியுடன் விரையும் மனிதநேயர் இவர்.

ஆண்டுதோறும் கதிர்காமம் மற்றும் ஈழத்து சிதம்பர பாதயாத்திரையில் இளம் சிவதொண்டர் பலரை ஒருங்கிணைத்து பயணிக்கின்றார். உகந்தை காட்டுப் பிரதேசத்தில் கதிர்காம யாத்திரிகர்களிற்கு தேவையான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை சிவதொண்டர்களை ஒருங்கிணைத்து ஆற்றி வருகின்றார்.

ஆலயம் சமூக மையம் என்பதை செயற்படுத்தி காட்டிக் கொண்டிருக்கும் தற்போதைய அம்பாறை திருக்கோவில் கண்ணகி அம்மன் ஆலயத் தலைவராகவும் மகேசன் பணியும் மக்கள் பணியும் ஒருங்கே ஆலயம் ஊடாக ஆற்றிவரும் அறங்காவலராகவும் திகழ்கின்றார்.

கொரோனா, பொருளாதார நெருக்கடியில் அரிசி விலை உயர்ந்த போது ஆலய பண்டகசாலையில் இருந்து நெல்லை மானிய விலையிலும் இலவசமாகவும் கோவிலைச் சார்ந்த நலிவுற்ற குடும்பங்கள் சகலருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி விநியோகித்தார்.

அப்பர் பெருமானின் வழி தொண்டை இன்றும் செயலில் காண்பிக்கும் வண்ணம் தனது சிவ தொண்டர் அணியுடன் ஆலய பெருந்திருவிழாக்களை தொடர்ந்து பிரதேச வேறுபாடு இன்றி சிரமதானம் செய்யும் பணியில் இறங்கி தொண்டாற்றுகின்ற இனிய மனிதர்.

 கிழக்கிலிருந்து வந்து யாழ் நல்லூரில் சில ஆண்டுகள் தேர் திருவிழாவைத் தொடந்து சிவலிங்கம் பொறித்த மஞ்சள் சீருடையுடன் சிரமதானம் செய்த காட்சி நாடாளாவிய சிவதொண்டர் சிவமங்கையர் அணிகளை உருவாக்க புத்துணர்வு தந்தது.

இத்தகைய செயல்வீரரான முன்னுதாரண சிவதொண்டரிற்கு அகில இலங்கை சைவ மகா சபை 2023 ஆண்டுக்கான அன்பே சிவம் விருது சிவராத்திரி சிவ வார காலப்பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது

கடந்த ஆண்டுகளில் இவ்விருது மகப்பேற்று வைத்திய நிபுணர் ந.சரவணபவ, முன்னாள் அதிபர் அ.பஞ்சலிங்கம், அறங்காவலர் ஆ.நவரட்ணராசா ஆகியோருக்கு வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

FB IMG 1709347580998 FB IMG 1709347574262 FB IMG 1709347577930

Comments are closed.