இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்த நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, HIV மற்றும் STI எனப்படும் பாலியல் தொடர்பான தொற்று நோய்கள் தொடர்பில், குறிப்பாக இளம் வயதினர் இடையே குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது.
சுகாதார அமைச்சின் பிரிவு மேற்கொண்ட கலந்துரையாடல்களில் சில பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தொடர்புடைய அனைத்து தரப்புகளையும் இணைத்து இந்த நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிலர் அறியாமையால் குறித்த தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு அதிகமாக அடிமையாகுவது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு இட்டுச் செல்லக்கூடிய அபாயம் இருப்பதாக மனநல மருத்துவர் சமிந்த வீரசூரியவர்தன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் திரை அடிமையால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காரணமாக, குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறை போதைப்பொருள் பயன்பாட்டை நோக்கி செல்லக்கூடும் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளார்.










