அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த வாரம் கடுமையான மற்றும் அபாயகரமான வெப்ப அலை தீவிரமடையக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜூலை 4ஆம் திகதி சுதந்திர தின வார இறுதி விடுமுறையை மக்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 120 மில்லியன் மக்கள் தீவிர வெப்ப எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
இந்த தீவிர வெப்பநிலை, நாளை மத்திய மேற்கு மற்றும் மிசிசிப்பி பள்ளத்தாக்கு பகுதிகளில் உச்சமடைந்து, பின்னர் கிழக்கு நோக்கி நகரக்கூடும்.
35°C முதல் 40.6°C வரை பதிவாகக்கூடிய இந்த வெப்பநிலையானது, அதிக ஈரப்பதத்துடன் இணைந்து 38°C முதல் 46°C வரையிலான வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
நிலைமையைக் கட்டுப்படுத்த நியூயோர்க் நகர முதல்வர் ஜோஹ்ரான் மாம்தானி அவசரகாலத் திட்டத்தைச் செயல்படுத்தி நூற்றுக்கணக்கான குளிரூட்டும் மையங்களைத் திறந்துள்ளார்.
டெட்ராய்ட் உள்ளிட்ட பல நகரங்களிலும் குளிரூட்டப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மறுபுறம், கனடாவின் ஒன்ராறியோ மற்றும் மொன்றியால் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்ப அலை ஆரம்பமாகியுள்ளதுடன், அங்கு வெப்பநிலை 37°C வரை உயரக்கூடும் என்பதால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடுமையான வெப்ப அலை காரணமாக, கால்பந்து போட்டிகள் நடைபெறும் டொராண்டோ, அட்லாண்டா மற்றும் டெக்சாஸ் போன்ற நகரங்களில் உள்ள மைதானங்கள் மற்றும் ரசிகர்களுக்கான பகுதிகள் குளிரூட்டப்பட்ட கூடாரங்களாக மாற்றப்பட்டு வருவதுடன், பாதுகாப்பற்ற வெப்பநிலை காரணமாக சில போட்டிகளின் போக்கிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.










