2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பணிப்பாளர் எம். தேவராசன் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் தமது செய்தியில்,
மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எமது மன்றத்தின் பரிணாம வளர்ச்சியைப் போல மலையக மாணவர்களின் கல்வி மற்றும் பெறுபேற்று மட்டங்களும் படிப்படியாக வளர்ந்து இன்று பல்கலைக்கழக அனுமதியில் குறிப்பிடத்தக்க அடைவு மட்டத்தை எட்டியுள்ளமை மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதற்காக பாடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்களின் பெறுபேற்று வளர்ச்சிக்கு எமது மன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டு வரும் இலவச முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள்களும் உதவியாக இருந்துள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்து வருகின்றமை எமது பணிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். இது மென்மேலும் எமக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு எமது மன்றம் வழங்கி வரும் புலமைப்பரிசில் திட்டம் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்ற மகிழ்ச்சியான விடயத்தையும் அறியத் தருவதோடு, உதவி தேவைப்படும் பாடசாலைகளும், மாணவர்களும் தயங்காமல் எம்மோடு தொடர்பு கொள்ளலாம். அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.
மேலும், கல்விப் பணியில் இருபது ஆண்டுகளை நிறைவு செய்து 21 ஆவது ஆண்டில் தடம் பதித்துள்ள எமது மன்றம் அதன் எழுச்சி விழாவை தலைநகரில் நடத்தி முத்திரை வெளியிட்டு சாதனை படைத்த நிகழ்வில் மனமுவந்து நேரில் கலந்து கொண்ட போஷகர்கள், பிரதம, சிறப்பு அதிதிகள், வள்ளல் பெருந்தகைகள், நிர்வாக சபை அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள், வாழ்த்துச் செய்திகள் அனுப்பி வைத்து சிறப்பித்த நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, எதிர்காலத்திலும் தகுந்த ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.










