உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!
மாத்தறை மாவட்டம், அத்துரலிய பிரதேசத்தில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், 70 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில், உந்துருளி ஒன்றைச் செலுத்திச் சென்ற அத்துரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மற்றைய உந்துருளியைச் செலுத்திச் வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்துடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.