ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசின் தலையீடுகள் எதுவுமே இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளைப் புதிய அரசு முன்னெடுக்கவில்லை. மாறாக, புலனாய்வு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட விசாரணை நிறுவனங்களுமே அதனை முழுமையாகச் சுயாதீனமாக மேற்கொண்டு வருகின்றன.
கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய அரசு இந்த நிறுவனங்களை வலுப்படுத்தி, அவற்றின் மீதான அரசியல் அழுத்தங்களை முற்றாக நீக்கியுள்ளது.
விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்கான பின்னணியை மட்டுமே அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், அதன் சாதகமான பலன்கள் தற்போது விசாரணைகளின் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளன.
விசாரணைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் எதுவும் தெரியாது.
எனினும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள நீதிமன்ற நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்குரியது.
தன்னைக் கைது செய்ய வேண்டாம் எனக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளமையானது, எனக்கோ அல்லது அரசுக்கோ மட்டுமல்ல, நாட்டின் சாதாரண பொதுமக்களுக்கும் அவர் மீது ஒரு பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
குண்டுத் தாக்குதலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு நபர், ‘என்னைத் தடுத்துக் கைது செய்ய வேண்டாம்’ என்று அவசர அவசரமாக நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியென்றால், இந்தச் சம்பவங்களுடன் அவருக்கு ஏதோவொரு தொடர்பு இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
‘திருடன் பிடிபடுவதற்கு முன்னர் அவசரமாகத் தப்பியோட முயல்வதைப் போன்ற’ கிராமத்துப் பழமொழிக்கு அமைவான ஓர் உதாரணமாகவே முன்னாள் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான நபர்கள் கைது செய்யப்படப் போகின்றார்கள் என்பது குறித்து அவர்களின் அரசியல் சகாக்கள் முன்னரே ஊடகங்களில் கூறிவந்ததை நாம் அறிவோம்.
எமக்குத் தெரியாவிட்டாலும், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
நாட்டில் சட்டத்தையும் நீதியையும் முறையாக நிலைநாட்டுவதற்காகவே மக்கள் இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டுவந்துள்ளனர்.
எனவே, விசாரணை நிறுவனங்களைத் தொடர்ந்து பலப்படுத்தி, அரசியல் தலையீடற்ற பின்னணியை உருவாக்குவோம். அதிகாரிகள் எவ்வித அச்சமுமின்றித் தங்களின் கடமைகளை ஆற்றுவதற்கான முழுமையான ஆதரவையும் பலத்தையும் எமது அரசு தொடர்ந்து வழங்கும்.” – என்றார்.










