அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந் நடவடிக்கையின் போது கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார், பொது சுகாதார அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் சுற்றுச்சூழல் அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கினிகத்தேன நகரில் உள்ள பொது பேருந்து நிலையம், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், பொது இடங்கள், வர்த்தக நிறுவனங்கள் என்பன சோதனை இடப்பட்டு டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறான சேவைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
அத்துடன் இது குறித்து அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந கருத்து தெரிவிக்கையில், அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பொதுமக்கள் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும். நமக்கு பின்னர் நமது சந்ததியினருக்கு சுத்தமான பிரதேசத்தை உருவாக்குவது எமது தலையாய கடமை.
அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டவளை, கினிகத்தேன, நோட்டன், கலுகலை, லக்சபான, பொல்பிட்டிய, ஹங்கராம்பிட்டி, கிரிவன்னெலிய போன்ற பகுதிகளை உள்ளடக்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து நகர கிராமங்களிலும் உக்கா பொருட்கள் குவிந்து வருகிறது. அதன் காரணமாக இனிவரும் காலங்களில் எந்த ஒரு உக்கா பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டு பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள அனைத்து பொருட்களையும் பிரதேச சபையின் வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந கோரிக்கை விடுத்துள்ளார்.











