கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக, சுமார் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்க கடற்படையால் விதிக்கப்பட்டிருந்த முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, இந்தக் கப்பல்கள் பாதுகாப்பாக தமது பயணத்தைத் தொடர்ந்துள்ளதுடன், உலக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த அழுத்தம் தளரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டியோனா (Diona) மற்றும் ஹீரோ 2 (Hero 2) எனப் பெயரிடப்பட்ட இரண்டு சுப்பர் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தேசிய ஈரானிய எண்ணெய் தாங்கி நிறுவனத்திற்குச் சொந்தமானவை எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த இரு கப்பல்களும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த முன்னேற்றம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் உலக எரிசக்தி சந்தைக்கு முக்கியமான சமிக்ஞையாகக் கருதப்படுவதுடன், சர்வதேச எண்ணெய் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.










