டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இப்பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் சூறாவளியினால் கொட்டகலை, கிரேட்வெஸ்டன், நானுஓயா, பெராக்கும்புர மற்றும் அம்பேவெல புகையிரத நிலையங்களுக்கு அருகில் 5 இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதில் கொட்டகலை – தலவாக்கலை (112.5 மைல்கல் அருகில்) சுமார் 50 மீற்றர் நீளமான பகுதி மற்றும் நானுஓயா – அம்பேவெல இடையிலான பகுதிகளின் புனரமைப்புப் பணிகள் தனியார் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்புச் சுவர்களை அமைப்பதற்காகக் கற்களைக் கொண்டு செல்ல புகையிரத திணைக்களத்தின் புகையிரத சேவை (Service Train) மற்றும் அதன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய மலைநாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்து நலன் கருதி, புகையிரதப் பாதையை விரைவாகச் சீரமைக்கும் நோக்கில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













