கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக் கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு சமூகத்தின் முன்னால் உத்தமர்களைப் போல் வலம் வர நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடுமையான தொனியில் தெரிவித்தார்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஆராதனையின் போது உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உண்மைகளை மூடிமறைக்க எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 2024 செப்டெம்பர் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது, இக்குற்றத்தின் உண்மைகளை மறைக்க மாட்டேன் என உறுதியளித்திருந்தார். அதற்கமைய தற்போதைய விசாரணைகள் வேகம் பெற்றுள்ளதை வரவேற்கின்றோம்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பாரிய அரசியல் சதித்திட்டம் இருந்தமைக்கான உறுதியான சான்றுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருவதாகப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அன்று அதிகாரத்தில் இருந்தவர்களால் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்ட உண்மைகள் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
அதேநேரம், தங்களது அரசியல் பிம்பம் சிதைந்துவிடும் என்ற அச்சத்தில், இந்தச் சதியில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் ஊடகங்கள், போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் மூலம் தற்போதைய விசாரணைகளைப் பின்னுக்குத் தள்ள தீவிரமாக முயன்று வருகின்றனர். நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் கைவைப்பதற்கும், சாட்சியங்களை அச்சுறுத்துவதற்கும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அருவருக்கத்தக்கவை.
அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும், பாதுகாப்புப் பிரிவினரும் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அஞ்சாமல், உண்மையை வெளிப்படுத்தும் பணியைத் துணிச்சலுடன் தொடர வேண்டும். தவறு செய்யாதவர்கள் விசாரணைகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தற்போதைய விசாரணைகளை எப்படியாவது தடுக்க முயல்பவர்கள், தாங்கள் இக்குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்பதையே பொதுமக்களுக்கு உறுதிப்படுத்துகிறார்கள்.
எனவே, இந்தக் கொடூரக் கொலை குறித்து மேலதிக தகவல்கள் அறிந்தவர்கள் நீதிக்காகவும், தார்மீக வலிமைக்காகவும் துணிச்சலுடன் முன்வந்து சாட்சியமளிக்குமாறு ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.










