யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர் ஒருவர் கடல் கொந்தளிப்புக் காரணமாகக் காணாமற்போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு – தாளைத்துறைப் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு இரண்டு மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் ஏற்பட்ட கடுமையான நீரோட்டம் மற்றும் கொந்தளிப்புக் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த படகிலிருந்து இரண்டு மீனவர்களும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு காணாமற் போயுள்ளனர்.
காணாமற்போன மீனவர்களை மீட்கும் பொருட்டு சக மீனவர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் விளைவாக, விபத்துக்குள்ளான மீனவர்களில் ஒருவர் நேற்று பகல் வேளையில் படகுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும், கடலில் மூழ்கிய மற்றைய மீனவர் விடியும்வரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், கடற்படையினரின் உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் இணைந்து அவரைத் தேடும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.










