யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – மயிலிட்டி பகுதியில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவத்தின் “கொமாண்டோ” பங்களா முன்பாக நேற்று ஏழாவது வெள்ளிக்கிழமையாகவும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலிகாமம் வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் யுத்தம் காரணமாகத் தமது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அன்று முதல் இன்று வரை சுமார் 36 வருடங்களாக அப்பகுதி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகவே நீடித்து வருகின்றது.
யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாமல் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே வைத்துள்ளனர். இதன் காரணமாக, தமது 651 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலங்களை விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் பல வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசுகள் மாறினாலும் தமது நிலங்கள் விடுவிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுப்பதென மக்கள் தீர்மானித்திருந்தனர். அதற்கமைய, நேற்று ஏழாவது வாரமாகவும் அமைதி வழியிலான கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“36 வருடங்கள் கடந்தும் எமது வாழ்க்கை அகதி வாழ்க்கையா?”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மக்களுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.










