இரத்தினபுரி – பெல்மதுல்ல வீதியின் வெலிஹந்த பிரதேசத்தில் உள்ள இரட்டை வளைவுப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பாரிய வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெருமளவிலான மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற ‘பிரைம் மூவர்’ ரக வாகனம், குறித்த இரட்டை வளைவுப் பகுதியில் திரும்ப முற்பட்டபோது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரம் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தால் வாகனத்துக்கும், அதில் ஏற்றி வரப்பட்ட மதுபானத் தொகைக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை நேரம் என்பதால் வீதியில் ஏனைய வாகன நடமாட்டங்கள் குறைவாக இருந்தமையால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான வாகனத்தை வீதியிலிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் போக்குவரத்துக்குச் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக பெல்மதுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வெலிஹந்த இரட்டை வளைவுப் பகுதி அடிக்கடி விபத்துக்கள் நிகழும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.










