மஹியங்கனை – அராவத்தை, ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் ஒருபெதிவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (10) இரவு தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, மதுபோதையில் இருந்த கணவர் மனைவியையும் மகளையும் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த ஏயார் ரைஃபில் (Air Rifle) ரக துப்பாக்கியால் மனைவியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பின்னர் சந்தேக நபரான கணவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைஃபில் துப்பாக்கி மற்றும் 77 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமறைவாக உள்ள சந்தேக நபரை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










