காலி, கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகஹ சந்திக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அம்பகஹ சந்திக்கு அருகில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மீது, அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த முதியவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
படுகாயமடைந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு கோனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இந்துருவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொஸ்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.










