ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவர், இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றில் ஆணைக்குழு அதிகாரிகள் சமர்ப்பித்த தகவல்களின் படி, 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமைச்சின் மூலம் ஏற்கனவே எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் மூலம் 28 இலட்சத்து 53 ஆயிரத்து 935 ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.ஆரம்பத்தில் மாதந்தோறும் 50,000ரூபாய் வழங்கப்பட்டதுடன், பின்னர் அது 75,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.
எனினும், பிணை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு இல்லை என ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரின் வெளிநாட்டு பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.










