மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார்.
மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம். மாஹிர், மல்வத்தை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.எல். குடாபடு மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது வைத்தியசாலையில் நிலவும் அத்தியாவசிய தேவைகள், ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவையில் உள்ள சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் விஜயம் செய்த பணிப்பாளர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன், வைத்தியசாலை நிர்வாகம் முன்வைத்த முக்கியமான மற்றும் அவசர தேவைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், குறைந்த வசதிகளுடனும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் அர்ப்பணிப்பான பணியையும் பணிப்பாளர் பாராட்டினார்.










