ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு எந்த விருப்பமும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சனிக்கிழமை (07) ஊடகங்களிடம் இணையவழி உரையாற்றிய அவர், தெஹ்ரானில் செயல்படும் இராணுவம் அல்லது ஆட்சியில் மீதமுள்ள தலைமைகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டால் மட்டுமே ஈரானுடனான போர் முடிவடையும் வாய்ப்பு இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஈரானின் சாத்தியமான தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, ஈரானிய இராணுவம் முழுமையாக அழிக்கப்பட்டால், அதன் பின்னர் வான்வழி தாக்குதல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து பேசப்படும் நிலை உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போர் இரண்டாவது வாரத்துக்குள் நுழைந்துள்ளது. சனிக்கிழமை இஸ்ரேலும் ஈரானும் ஒருவரை ஒருவர் நோக்கி பல தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக, அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் ஜனாதிபதி அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவரது இந்த நடவடிக்கை ஈரானின் உள்நாட்டில் உள்ள கடும்போக்கு அணிகளிடமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அதேவேளை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் யாராவது தங்கள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரச தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒஸ்லோ நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்றுஅதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தால் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிவிபத்துக்கு என்ன காரணம் அல்லது யார் தொடர்புடையவர்கள் என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை.










