மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையில் அமைந்துள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ்மா அதிபரின் அவசர அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை, அனைத்து தூதரகங்களுக்கும், அவற்றின் உத்தியோகபூர்வ அலுவலகங்களுக்கும் தொடர்ச்சியான பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் செயற்படும் விசேட பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.வெளிநாட்டவர்கள் தங்கியுள்ள விடுதிகள், குடியிருப்பு கட்டிடங்கள், பிரதான வர்த்தக நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து, தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக பாதுகாப்பு வழங்குவதற்காக முப்படைகளின் உதவியையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.










