முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு லண்டன் வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தது உண்மை என முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப பொதுச்செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கான அழைப்பிதழை ஊடகங்களுக்குக் காண்பித்து அவர் விளக்கமளித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறுகையில், சர்வதேச தரம் வாய்ந்த வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தை எவராலும் ஏமாற்ற முடியாது எனவும், பல லட்சம் ரூபா செலவு செய்து தகவல் தேடியவர்களுக்கு இந்த அழைப்பிதழ் தெரியாமல் போனது ஆச்சரியமானது எனவும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவு மற்றும் ஆளுமை காரணமாகவேஇத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அவர் கூறினார்.
மேலும், முன்னைய ஆட்சிக்காலங்களில் முழு விமானத்தையே வாடகைக்கு எடுத்து சுற்றுப்பயணம் செய்த நிகழ்வுகளை குறிப்பிட்ட அவர், ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயம் கௌரவமானது எனவும் தெரிவித்தார்.தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தவறான பாதையில் பயணிக்கிறது எனவும், இது ஆட்சியின் முடிவுக்கான ஆரம்பமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் எதிர்காலத்தில் இந்த அரசுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்திக்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.










