சிறீதரன் விவகாரம் கொழும்பு மைய அரசியலை நடத்துவதா? அல்லது தாயாக மைய அரசியலை நடத்துவதா? என்ற பிரச்சினையே என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு,
2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை இரா. சம்பந்தன் அவர்களே எடுத்திருந்தார்.
அது சம்பந்தனின் முழுப்பொறுப்பு அதனை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருந்தது.
அன்றைக்கு முதலாவது எதிரி மஹிந்த ராஜபாக்ச, அவரை பலவீனப்படுத்தவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்திருந்தது.
அன்று கஜேந்திரகுமாரும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தமையால் அந்த முடிவுக்கு இணங்கி போகவேண்டியிருந்திருக்கலாம்.
அப்போது அந்த முடிவெடுத்தது தவறு என்பது எனது அபிப்பிராயம்.
அந்த நேரம் பொது வேட்பாளர் என்ற சிந்தனை அப்போது அதிகரிக்கவில்லை. உண்மையில் அந்த இரண்டு பேரையும் ஆதரிக்க முடியாது.
இரண்டு பேரையும் விடுத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம். அந்த இடத்தில் அவர்கள் விட்டது தவறு. ஆனால் அன்றைக்கு முதலாவது எதிரி மஹிந்த ராஜபக்ச, அன்று சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காமல் விட்டிருந்தாலும் மக்கள் ஆதரிக்கின்ற சூழல்தான் அப்போது இருந்தது.
ஆனால் அன்று இருந்த சூழலுக்கும் இன்று இருக்கின்ற சூழலுக்கும் வேறுபாடு உண்டு.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த ஒருவரை கணக்காளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவளித்ததாக ஒரு குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது. அது தொடர்பில் அவர் பொது வெளியில் எதனையும் கூறவில்லை.
அவர் ஆதரவு கொடுத்திருந்தால் உண்மையில் அது தவறுதான். அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து விலக சொல்லி கேட்பது பொருத்தமில்லை. ஆனால் அதனை கேட்பவர் யார் எனில் அவர் சுமந்திரன். சுமந்திரன் ஏற்கனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்பட்ட ஒருவர்.
சுமந்திரன் ஒரு பச்சை இனவாதியாக இருக்கின்றார். திருகோணமலை புத்த விகாரைக்கு ஆதரவாக இருந்த சஜித் பிரேமாதாசவுக்கு ஆதரவாக இருந்தவர். ஆகவே சுமந்திரனுக்கு அதனை சொல்லுகின்ற நியாயப்பாடு இருக்கின்றது என்பதை கூறிவிட முடியாது.
இந்த விடயத்தில் சிறீதரன் இராணுவ தளபதிக்கு வாக்களித்திருந்தால் அது தொடர்பான காரணத்தை மக்களுக்கு சொல்லவேண்டும். உண்மையாக இருந்தால் மன்னிப்பு கேட்கவேண்டும். இனிமேல் அவ்வாறு நடக்காமல் இருப்பதற்குரிய உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.
அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூற வேண்டிய தேவை இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.
சிறீதரனுக்கு எதிரான மிக மோசமான கருத்துக்களை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர முன்வைத்திருந்தார்.
இதற்கெல்லாம் பின்புலமாக நின்று செயற்பட்டவர் சுமந்திரன்தான். சுமந்திரன் கொழும்பு மைய அரசியலை நகர்த்துகின்ற ஒருவர். கொழும்பு மைய அரசியலை நகர்த்த வேண்டும் என்றால் சிறீதரனை இந்த அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.
சிறீதரனை அகற்றாமல் கொழும்பு மைய அரசியலை அவரால் செய்ய முடியாது. அதற்காக சிறீதரனை அகற்றுவதற்கு சுமந்திரன் கடுமையாக நிற்பது போலத்தான் தெரிகிறது. இன்றைக்கு அவர்களுடைய அரசியல் குழுக் கூட்டத்தில் அரசியல் குழு என்று அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை. அரசியல் குழு என்பது சுமந்திரனுடைய எடுபிடிகளை கொண்ட குழுதான். அந்த அரசியல் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் சுமந்திரனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வி வருகிறது.
சிறீதரன் தலைவராக பதவி ஏற்றபோது அதனை தடுத்ததில் சுமந்திரனுக்கு பெரிய பங்கு உண்டு. அங்கு எல்லாம் கட்டமைப்புக்கு விரோதமாக செயற்பட்டுவிட்டு இன்றைக்கு அமைப்பு செயற்பாட்டை எல்லாம் குறித்து காட்டுவது அவ்வளவு பொருத்தமானது என நான் நினைக்கவில்லை. இந்த பிரச்சினை என்பது சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் உரிய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக இது கொள்கை பிரச்சினை. கொழும்பு மைய அரசியலை நடத்துவதா அல்லது தாயாக மைய அரசியலை நடத்துவதா என்ற பிரச்சினை. சிறீதரன் நிர்ப்பந்தம் காரணமாகவோ அல்லது மரபு ரீதியாகவோ தாயாக மைய அரசியல் பக்கம் நிற்கின்ற நிலைமைதான் காணப்படுகின்றது. ஆகவே தாயாக மைய அரசியலை பலவீனப்படுத்தி கொழும்பு மைய அரசியலை முன்னெடுப்பதற்காகவே இந்த நிலைமைகள் காணப்படுகின்றன.
இந்த நிலைமைகளை மக்கள் சரியாக அவதானித்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய அபிப்பிராயம்.
தமிழரசுக் கட்சி பலவீனம் அடைவதை நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு முகமுள்ள ஒரு கட்சி. தமிழரசுக் கட்சியை சுமந்திரன் தன்னுடைய தேவைக்காக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.










