கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச வதிவிடத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) வெளியேறினார்.
இன்று பிற்பகல் அவர் வெளியேறும்போது, அந்தப் பகுதியில் மொட்டுக் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஒன்றுகூடி இருந்தனர்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ வெளியேறுவதற்கு முன்னர் அவரை இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரும் சந்தித்திருந்தனர்.
இவ்வாறு வெளியேறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில் குடியேறவுள்ளார். அவரை அங்கு வரவேற்பதற்குரிய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசு அறிவித்திருந்தது. இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது.
எனினும், தனக்கு சட்டபூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது பற்றி பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இதனால் இந்த விவகாரம் அரசியல் ரீதியிலும் பேசுபொருளானது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நேற்று (10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று மஹிந்த வெளியேறினார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலையே ராஜபக்ஷக்களின் பூர்வீகம், அரசியல் கோட்டை. அங்கிருந்தே மஹிந்தவின் அரசியல் பயணம் கூட ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் வெளியேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட மொட்டுக் கட்சி பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன, “செப்டெம்பர் 11 என்பது உலகில் பலம் பொருந்திய நாட்டுக்கும் பயங்கரவாதத்தின் அச்சம் தென்பட்ட நாளாகும். செப்டெம்பர் 11 தாக்குதல் நடந்த நாளாகும்.
பயங்கரவாதிகளிடம் இருந்து இலங்கையை பாதுகாத்த தலைவர் இப்படியானதொரு நாளில் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு இந்த வீட்டை (விஜேராம) வழங்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.
மஹிந்த ராஜபக்ஷ என்பவர் அநுரவுக்குப் பயந்தவர் அல்லர்” என்று குறிப்பிட்டார்.
மஹிந்தவின் அரசியல் பயணம்
🛑 1970 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட அவர், 23 ஆயிரத்து 103 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். நாடாளுமன்றத்துக்கு இளம் வயதில் (25) தெரிவான உறுப்பினர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
🛑 1977 இல் பொதுத்தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தார்.
🛑 1989 இல் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கி, 13 ஆயிரத்து 73 வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்றத்துக்கு மஹிந்த தெரிவானார்.
🛑 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த, 78 ஆயிரத்து 77 வாக்குகளுடன் சபைக்குத் தெரிவானார். இந்தத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிநடை போட்டது.
🛑 1994 இல் சந்திரிகா தலைமையிலான அமைச்சரவையில் தொழில் அமைச்சுப் பதவி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டது. 1997 வரை அந்தப் பதவியில் அவர் நீடித்தார்.
🛑 1997 இல் மீன்பிடித்துறை அமைச்சுப் பதவி மஹிந்தவுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2001 வரை அந்தப் பதவியை அவர் வகித்தார்.
🛑 2001 இல் பொதுத் தேர்தலில் 109 ஆசனங்களை வென்று ஐ.தே.க. ஆட்சி அமைத்தது. அவ்வேளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
🛑 2004 இல் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. சபைக்குத் தெரிவான மஹிந்தவுக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2002 முதல் 2004 வரை அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
🛑 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த களமிறங்கினார். 48 இலட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
🛑 2010 ஜனாதிபதித் தேர்தலில் 2 ஆவது முறையும் மஹிந்த போட்டியிட்டார். 60 இ லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.
🛑1978 அரசமைப்பின் பிரகாரம் நபர் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 18 ஆவது திருத்தச் சட்டம்மூலம் இந்த ஏற்பாட்டை மஹிந்த கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாற்றினார்.
🛑 2015 இல் மூன்றாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த போட்டியிட்டார். எனினும், அவரால் வெற்றி பெற முடியவில்லை.
🛑 2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கிய மஹிந்த 4 இலட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு எதிரணி உறுப்பினராக வந்தார்.
🛑 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சியின் மஹிந்த பிரதமராகப் பதவியேற்றார்.
🛑 2018 டிசம்பர் 15 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த இராஜினாமா செய்தார்.
🛑 2018 டிசம்பர் 18 இல் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த நியமிக்கப்பட்டார்.
🛑 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து, நவம்பர் 21 ஆம் திகதி பிரதமராக மஹிந்த பதவியேற்றார்.
🛑2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளை மஹிந்த பெற்றார். அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
🛑 அரகலய போராட்டத்தால் 2022 மே 9 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை மஹிந்த விடுத்தார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஹிந்த போட்டியிடவில்லை.
இந்நிலையில், அன்று அரசியலை ஆரம்பித்த இடத்துக்கே இன்று குடியேறுவதற்கு மஹிந்த சென்றுவிட்டார்.
எனினும், கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச வதிவிடத்தில் இருந்து மஹிந்த இன்று வெளியேறும் போது, “நான் அரசியலில் இருந்து விலகவில்லை” என்று அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.










