ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான தூய்மையான நாட்டை உருவாக்கும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான கல்வித்துறையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சூழல் உணர்வுமிக்க சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இந்தத் திட்டம் இன்று நடைபெற்றது.
அனைத்து கல்வி வலயங்களிலும் நடைபெற்ற நிலையில் கோட்டைமுனை கனீஸ்ட வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி. சங்கீதா அருள்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெற்றோர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் அவசியம் தொடர்பில் மாணவர்களின் விழிப்புணர்வு நடைபெற்றதுடன் மாணவர்களின் உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களின் விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது.
அதேபோன்று பாடசாலையினையும், அதன் சூழலையும் தூய்மையாக வைத்திருக்கும் திட்டத்தின் கீழ் பெற்றோரினால் மாபெரும் சிரமதானமும் முன்னெடுக்கப்பட்டது.














