பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், பர்மிங்காமின் போயர் சாலை (Bowyer Road) பகுதியில், செயிண்ட் சேவியர்ஸ் சாலைக்கு (St Saviours Road) அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அவசர தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மேற்கு மிட்லாந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தடயவியல் ஆய்வுகள், சிசிடிவி காட்சிகள் சேகரித்தல் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்துதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தத் துப்பாக்கிச் சூடு அருகிலுள்ள பள்ளிவாசலை குறிவைத்து நடத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கு மிட்லாந்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கவலைகளுக்கு பதிலளிப்பதற்காக எங்கள் அதிகாரிகள் தொடர்ந்து அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தங்களிடம் வீடியோ பதிவு, சிசிடிவி காட்சிகள் இருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.










