வவுனியாவில் நாளைய தினம் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக வவுனியா மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவக்கையில்,
அன்பார்ந்த வவுனியா வர்த்தகப் பெருமக்களே,
“எமது நிலம்! எமது இருப்பு! நம்மை நாமே ஆள்வோம்!”
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், ஏதோ ஒரு வகையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
இன்று அந்த ஒடுக்குமுறை புதிய வடிவம் பெற்று, வளர்ந்து வரும் எமது இளம் அரசியல் தலைமுறையையே ஆரம்பத்திலேயே அடக்கி ஆள முயற்சிக்கப்படுகிறது.
வவுனியாவின் முதலாவது மாநகரசபை உருவானபோது, தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இளம் தலைமுறையின் தலைமையில் ஆட்சியை அமைத்தன.
அந்த ஆட்சி வெறும் 90 நாட்களிலேயே மக்களின் நலனுக்காக வேகமாகவும் திறமையாகவும் செயல்பட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. இதனைக் கண்டு அச்சமடைந்த எதிர்த்தரப்பினர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்று, கடந்த எட்டு மாதங்களாக மாநகரசபையின் செயற்பாடுகளை முடக்கினர்.
அதன் பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்பட்டபோதிலும், ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எமது மண்ணின் முதலாவது மாநகர முதல்வரை பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளனர்.
மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியை, அரசால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி எந்த சட்ட அடிப்படையில் பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற கேள்வி இன்று ஒவ்வொரு ஜனநாயக விரும்பியினதும் மனதில் எழுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
அப்படியிருக்க, விசாரணை நிறைவடைவதற்கு முன்பே பதவி நீக்கம் மேற்கொள்ளப்படுவது நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் முரணானதாகும்.
எந்தக் குறுக்கு வழியையும் பயன்படுத்தி வவுனியா மாநகராட்சியின் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியே இந்த நடவடிக்கை என மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
எனவே, இந்த ஜனநாயக விரோதமும் அராஜகமான போக்கையும் வன்மையாகக் கண்டித்து, தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தை நேசிக்கும் பொதுமக்களின் ஆதரவுடன் 2026 ஜூன் 29 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்தில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
வவுனியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் வர்த்தகப் பெருமக்களாகிய தங்களிடமும் எமது அன்பான வேண்டுகோள்:
* திங்கட்கிழமை தங்களது வர்த்தக நிலையங்களில் கறுப்புக் கொடியை ஏற்றி ஜனநாயகத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறும்,
* பிற்பகல் 1.00 மணி வரை தங்களது வர்த்தக நிலையங்களை மூடி இந்த ஜனநாயகப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.










