தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் மீதான அமெரிக்க முற்றுகையை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு உடன்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை (14) வொஷிங்டன் உள்ளூர் நேரப்படி மாலை 5:30 மணியளவில் (2130 GMT) தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (இன்று) அதிகாலையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அவரது இந்தப் பதிவு வெளியானது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) அன்று சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது.
எனினும் போர் நிறுத்தம் தொடர்பான துல்லியமான நிபந்தனைகள் உடனடியாகத் தெரியவில்லை.
இருப்பினும், “லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவர” இந்த ஒப்பந்தம் நிர்ப்பந்திக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் கூறினார்.
எனினும் லெபனான் பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
அண்மைய வாரங்களில், ஒருவரையொருவர் தாக்குவதை நிறுத்துமாறு ட்ரம்ப் மற்றும் பிறர் விடுத்த அழைப்புகளை இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் புறக்கணித்து வருகின்றன.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் திங்கட்கிழமை இரவு முதல் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி, 60 நாள் போர்நிறுத்தக் காலத்தில், ஈரானுக்கான தடைகளை நீக்குவது உட்பட, மேலும் விரிவான ஒரு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் என்று கூறினார்.
மற்றொரு சிக்கலான பிரச்சினையான ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும் அந்தப் பிற்காலப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படும் என்று வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்திருந்தன.
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் தாங்கள் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ள இஸ்ரேலிடமிருந்து, இந்த அறிவிப்புக்கு உடனடியாக எந்த எதிர்வினையும் வரவில்லை.









