கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல உலக நாடுகள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளையும், எல்லைப் பாதுகாப்பு சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.
கடந்த 15 ஆம் திகதி கொங்கோவில் இந்த எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, அங்கு இதுவரை 900 சந்தேகிக்கப்படும் தொற்றாளர்களும், 220 உயிரிழப்புகளும் உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) பதிவு செய்யப்பட்டுள்ளன.
உகாண்டாவில் இதுவரை ஐந்து பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் கொங்கோவிற்கான தேசிய அளவிலான ஆபத்து மதிப்பீட்டை ‘அதிகம்’ என்பதிலிருந்து ‘மிகவும் அதிகம்’ (Very High) என்ற நிலைக்குக் கடந்த வாரம் உயர்த்தியது.
எனினும், உலகளாவிய ரீதியில் இதற்கான ஆபத்து இன்னும் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வைரஸைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.










