தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடித் தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 10:15 மணியளவில் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முறைப்படி ஆரம்பமாகின.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான உறவுகளின் நினைவாக இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
காலை 10:29 மணியளவில் நினைவொலி எழுப்பப்பட்டு, முள்ளிவாய்க்கால் மண்ணே அதிர்ந்தது.
காலை 10:30 மணியளவில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இறுதிப் போரில் தனது குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைப் பலிகொடுத்த வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசா பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
அதேநேரத்தில், நினைவேந்தல் முற்றத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஒற்றைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவித் தமது உறவுகளுக்காகக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவு மற்றும் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
17 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்களின் தளராத உறுதியை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய நிகழ்வு அமைந்திருந்தது.
முள்ளிவாய்க்கால் முற்றமே மக்களின் கண்ணீராலும், சுடரொளியாலும் நிறைந்திருக்க, “நாம் இன்னும் மறக்கவில்லை” என்கின்ற செய்தி உலகுக்கு உரக்கச் சொல்லப்பட்டது.
























