“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குத் தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” – என்று அவரது ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சமீபத்தில் மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தபோது, முறையான உடற்பரிசோதனைகள் இன்றி பெருமளவிலான மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்துக்குள் ஒரு பயங்கரவாதி ஊடுருவியிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?
இறுதிப் போரின் நினைவேந்தல் நடைபெறும் இக்காலகட்டத்தில், சில குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயற்சி செய்யலாம். எனவே, அரசு இந்த விடயத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.” – என்றார்.
புதிய அரசு பதவியேற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையைக் கடுமையாகச் சாடிய அவர், இது திட்டமிட்ட ஒரு புறக்கணிப்பா என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளார்.
நாட்டின் தற்போதைய மர்ம மரணங்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான சம்பவங்களுக்கு மத்தியில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு மட்டுமன்றி, தனது சொந்தப் பாதுகாப்பு குறித்தும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.










