அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை மீண்டும் குறைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.பழைய கையிருப்பில் உள்ள எரிபொருளுக்கே விலையை உயர்த்துவது நுகர்வோருக்கு கடுமையான அநீதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (11) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 70 அமெரிக்க டொலர் அளவில் இருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலை காரணமாகக் கொண்டு விலை சூத்திரத்தை மாற்றி அதிக விலை அறவிடுவது மிகவும் தவறானதும் ஊழல் நிறைந்த செயலாகவும் உள்ளது என்றார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு உலக சந்தை காரணம் என கூறி அரசாங்கம் மக்களிடம் பொய்யான விளக்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.அதிகரித்த மசகு எண்ணெய் விலைசில மணி நேரங்களுக்குள் மீண்டும் குறைந்து வருவதாகவும், ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்த விலை உயர்வை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டின் மக்கள்மீது வரிச்சுமையை அதிகரித்து அவர்களுக்கு மேலதிக அழுத்தமும் துயரமும் ஏற்படுத்துவதாகவும், இதன் காரணமாக வறுமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து உற்பத்தியாளர்களும் வருமானம் ஈட்டும் மக்களும் இந்த முடிவால் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இது மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கும் நடவடிக்கையாக இருப்பதால், தற்போதைய ஊழல் நிறைந்த விலை சூத்திரத்தை உடனடியாக மீளப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
70 அமெரிக்க டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பீப்பாயின் விலையை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாழும் உரிமைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வை உடனடியாக நிறுத்தி அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மீளப் பெற வேண்டும் என்றும், வலுச்சக்தி பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடைமுறை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, நியாயமான முறையில் செயல்பட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும்தெரிவித்துள்ளார்.










