யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீதியோரங்கள், ஆலய முன்றல்கள், மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் நிற்கும் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு ஆள் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையில், நேற்று (27.02.2026) மாலை 7 மணியளவில் மருதங்கேணி சந்தியில் இருந்து செம்பியன்பற்று பகுதிக்கு செல்லும் வீதியில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் நின்றிருந்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தெரிவிப்பதாவது, அவர்களில் ஒருவர் தனது இருசக்கர வண்டிக்கு எரிபொருள் இல்லாத காரணத்தால் அருகிலுள்ள கடையில் எரிபொருள் பெற வந்திருந்ததாகவும், மற்றவர்கள் இரவு நேர கரப்பந்தாட்டப் பயிற்சிக்காகசெம்பியன்பற்று செல்ல வாகனத்துக்காக காத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.
சுமார் ஐந்து நிமிடங்கள் அங்கு நின்றிருந்தபோது, தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்திய அதிகாரிகள் வாகனத்தில் வந்து, விளக்கம் அளிக்க முயன்ற போதிலும் கருத்தை ஏற்காமல் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து மணிநேரங்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த பின்னர், தலா ரூபா 50,000 பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக, “எந்த குற்றமும் செய்யாத நிலையில், சுதந்திரமாக நடமாடுவதற்கே பயம் உருவாகியுள்ளது” என பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக நாட்டில் இடம்பெறக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் தரப்பினரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










